சாதாரண மக்களின் கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என 22-05-2018 அன்று அமைதியாக ஊர்வலம் சென்ற மக்கள் மேல் துப்பாக்கிச் சூடு நடத்தியது தமிழக அரசின் காவல் துறை. இதனால் 14 பேர் உயிரிழந்தனர்; எண்ணற்றோர் படுகாயமுற்றனர்.
அதன் முதல் ஆண்டு நினைவாக கூட்டம் நடத்த அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகியது, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக் குழு.
வழக்கம் போல, கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது காவல் துறை.
கூட்டம் நடத்த அனுமதி வழங்கிய உயர்நீதிமன்றம், 250 பேர் மட்டும் தான் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என ஒரு விநோதமான உத்தரவை போட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரும், படுகாயமுற்றோரும் மட்டுமே 250 பேருக்கு மேல் இருக்கும்.
எத்தனை ஆயிரம் பேர் வேண்டும் என்றாலும் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளும் உரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்பு சட்டம் அறிவிக்கும் போது, அந்த உரிமையை காப்பாற்ற வேண்டிய நீதிமன்றம், அந்த உரிமைக்கு நியாயமற்ற வரம்பு விதித்ததன் மூலம், காப்பாற்ற தவறியுள்ளது.
ஏற்கெனவே சென்ற ஆண்டு, தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டிப்பதற்கான கூட்டத்திற்கு அனுமதி வேண்டி CPM கட்சி தாக்கல் செய்த வழக்கில், இது போன்று கூட்ட எண்ணிக்கைக்கு மதுரை உயர்நீதிமன்றம் வரம்பு விதித்த போது, காவல் துறை கூட்டத்திற்கு வந்தவர்களை எண்ணி கணக்கெடுப்பு நடத்தி, கூடுதலான எண்ணிக்கையில் கூட்டம் கூடியதற்காக அக்கட்சியின் செயலாளர் மேல் குற்ற வழக்கு பதிவு செய்தது.
அதே தவறை நீதிமன்றம் மீண்டும் செய்வது விநோதமானதே.
இந்த நாட்டில் மோடியும், ராகுலும், எடப்பாடியும், ஸ்டாலினும் கூட்டும் கூட்டங்களுக்கு இது போன்ற வரம்பு விதிக்கப்படுகிறதா?
அரசியல் கூட்டங்களுக்கு வரம்பு விதிக்க வேண்டும் என்பது அல்ல என் கருத்து.
சாதாரண மக்களுக்கு கருத்துரிமை மறுக்கப்படும் அநீதி தொடர்கிறது; கருத்துரிமையை பாதுகாக்க மக்களுக்கு அமைதியான வழியில் போராடுவது தவிர வேறு வழி இல்லை. அமைதியாக போராடினாலும் சுட்டு விடுகிறார்களே!